அறுபத்து இரண்டாம் ஆண்டு, பெரியதொரு கருத்துப்போராட்டம் நடந்தது.

சிற்றூர்ப் பள்ளிகளை நடத்தி வந்த மாவட்ட ஆட்சிக்குழுக்கள் எடுபட்டன. ஊராட்சி ஒன்றியங்களிடம் தொடக்கப் பள்ளிகள் ஒப்புவிக்கப்பட்டன.

தொடக்கப்பள்ளிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர வேண்டுமென்பது, தில்லியிலிருந்து வந்த பரிந்துரை, மாநலக்கள் பலவும் உடனடியாக அதை ஏற்ற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சென்னை மாநிலம் அப்பரிந்துரையை ஏற்கவில்லை.


வேறு மாநிலங்களில் நடக்காத அரிய திட்டங்களையெல்லாம் சிறப்பாக நடத்தி வந்த தமிழ்நாட்டு ஆய்வாளர்கள், என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள்.

ஆய்வாளர்களின் மாநில மாநாட்டைத் திருச்சியில் கூட்டினோம். அபோதைய கல்வி அமைச்சரான மாண்புமிகு பக்தவத்சலமும் மாண்புமிகு முதல் அமைச்சர் காமராசரும் கலந்துகொண்டார்கள்.

வரவேற்புரையின்போது ஆய்வாளர்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க விரும்புவதாகவும் ஊராட்சி ஒன்றியத்திடம் தள்ளிவிட வேண்டாமென்றும் வேண்டினர். முதல் அமைச்சர் காமராசர் தமது உரையல்.

“ஆய்வாளர்கள் தணிக்கை செய்ய வேண்டியவர்கள். ஒன்றியங்கள் பள்ளிக்கூடத்தை நிருவகிக்க வேண்டியவை.

“எங்கள் கணக்கைப் பார்க்கும் அக்கௌண்ட்டண்ட் ஜெனரல், எங்கள் நிருவாகதின் கீழ் இருந்தால், கோடிக்கணக்கில் கோட்டை விடும்வரை தவறு தெரியாது. அதேபோல், ஆய்வாளர்கள் நிருவாகம் செய்யும் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டால், மெய்யான தணிக்கை நடக்காது. ஆகவே, நான் இருக்கும் வரை, ஆய்வாளர்களை ஒன்றியங்களிடம் விட்டுவிட மாட்டேன்” என்று கூறி எல்லோர் வயிற்றிலும் பால் ஊற்றினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநிலம் செய்வதே சரியென்பது தில்லிக்கு விளங்கிற்று.